மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் தந்தையை சரமாரி கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது: பாடியில் பயங்கரம்

அண்ணாநகர்: சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (60). இவருக்கு மனைவி மற்றும் சூரியபிரகாஷ் (26), குமரேசன் என்ற மகன்களும், பிரியா என்ற மகளும் உள்ளனர். தமிழ்செல்வன், தனது வீட்டின் அருகே பழக்கடை நடத்தி வந்தார். இவருக்கு உதவியாக அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர்.சூரியபிரகாஷ் குடிப்பழக்கம் உடையவர். அடிக்கடி குடித்து விட்டு, பெற்றோருடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு தயாராகினர்.அப்போது, வெளியே சென்ற சூரியபிரகாஷ், மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால், ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், மகனை கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சூரியபிரகாஷ், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, தந்தையை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் தமிழ்செல்வன் அலறி துடித்தார். குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், தமிழ்செல்வன் இறந்தது தெரிந்தது. தகவலறிந்து ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த சூரியபிரகாஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: