திருவொற்றியூர்: மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவரிடம் ₹50 ஆயிரம் மற்றும் ஐபோன் லஞ்சமாக வாங்கிய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பெரும்புதூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான இடம் மாதவரம் மேம்பாலம் அருகே உள்ளது. இந்த நிலம் சம்பந்தமாக இவருக்கும், வேறு ஒரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இந்த நில தகராறு சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு சில தினங்களுக்கு முன், மாநகர காவல் வடக்கு கூடுதல் ஆணையர் தினகரனிடம் சரவணன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாதவரம் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தினார்.பின்னர், இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்ததற்காக மனுதாரர் சரவணனிடம், ஆய்வாளர் சுரேஷ்குமார் லஞ்சமாக ₹50 ஆயிரம் மற்றும் ஒரு ஐபோன் கேட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.