மேட்டூர், ஏப்.23: கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லை பகுதியில், மணல் கடத்தலை தடுக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக-கர்நாடக எல்லையான அடிப்பாலாற்றில், காவிரியின் துணை நதியான பாலாறு, காவிரியில் கலக்கிறது. இதனால் இந்த பகுதியில், அதிகளவில் மணல் காணப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, இந்த பகுதியில் இருந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால் போன்ற பகுதிகளுக்கும், கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கும், இந்த மணல் கடத்தப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, காரைக்காடு, செட்டிப்பட்டி பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய கண்கானிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுக்களையும் மீறி, மணல் கடத்தல் தொடர்ந்து வந்தது. இதனால், மணல் கடத்தல்காரர்களுக்கும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. பின்னர் இந்த குழு செயல் இழந்தது. இதனை தொடர்ந்து, மணல் கடத்தல் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த, காவல் துறையினர் 8 பேர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், அடிப்பாலாற்றில் இருந்து ேகாட்டையூர் வரை கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த குழுவினருக்கு முழு அதிகாரம் கொடுத்தால் மட்டுமே, மணல் கடத்தலை முழுமையாக தடுக்க முடியும் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.