பெண்ணை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை

சேலம், ஏப்.23: சேலத்தில் பெண்ணை கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு, சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

சேலம் பள்ளப்பட்டி ராவணேஸ்வரன் நகர் பொன்னாங்காட்டை சேர்ந்தவர் பாலு (எ) பாலமுருகன்(34) ஆட்டோ டிரைவர். பள்ளப்பட்டி சித்தகவுண்டர்காட்டை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி தீபா. பாலமுருகனுக்கும், தீபாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி பாலமுருகன், தீபாவை கொலை செய்ய முயன்றார்.

இதில் தீபாவுக்கு கழுத்து, முதுகு, வயிறு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. இது சம்பந்தமாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மகிளா அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, பெண்ணை கொலை செய்ய முயன்ற பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ₹1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: