கோவை, ஏப். 23: கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள தனியார் பஞ்சாலை மில்லின் இயந்திரந்தில் சிக்கி வலது கை விரல்களை இழந்த குழந்தையின் மேல் சிகிச்சைக்காக பஞ்சாலை நிர்வாகம் உதவ கோரி கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் குழந்தையின் பெற்றோர் மனு கொடுத்தனர்.கும்பகோணத்தை சேர்ந்த முருகேஷ், ஹேமா தம்பதியினர் கோவை சோமனூர் அருகே உள்ள ஊஞ்ச பாளையத்தில் உள்ள தனியார் பஞ்சாலையில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவரது மகன் ரீத்திஸ் பாண்டி (3).
இதனிடையே கடந்த 6ம் தேதி மதியம் 2 மணி அளவில் சிறுவனின் தாய் ஹேமா பஞ்சாலையில் பணி புரிந்து கொண்டிருக்கும் போது அவரை காண சென்ற சிறுவனின் வலது கை எதிர்பாராத விதமாக அவனது இயந்திரத்தில் சிக்கியது. இதனால் பலத்த காயமடைந்த சிறுவன் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளான்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வேறு வலியில்லாமல் சிறுவனின் வலது கை விரல்களை (நான்கு விரல்களை) அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.இதனிடையே பஞ்சாலை நிர்வாகம் சார்பில் ரூ 10 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டதாகவும் அதன் பின் மேல் சிகிச்சைக்காக பணம் அளிக்கவில்லை என சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.இது குறித்து சிறுவனின் தாயார் ஹேமா நிருபர்களிடம் கூறுகையில், “ இதுவரை ரூ 43 ஆயிரம் மருத்துவ செலவு ஆகியுள்ளது. என் குழந்தையின் மேல் சிகிச்சைக்காக பஞ்சாலை நிர்வாகம் நிதி வழங்க வேண்டும். என் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது, பஞ்சாலை நிர்வாகம் உதவ வேண்டும்” என்றார்.