ஈரோடு, ஏப். 23: எஸ்.பி.அலுவலகத்தில் காத்திருப்பு அறை இல்லாததால் புகார் அளிக்க வரும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தினமும் மனு அளிக்க வருகின்றனர். எஸ்.பி.யை சந்தித்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் காத்திருப்பதற்காக எஸ்.பி.அலுவலகத்தின் முன்புறம் காத்திருப்பு அறை இருந்தது.
மேலும் பொதுமக்கள் அதிகமாக திரண்டு வந்து மனு அளிக்கும்போது அவர்கள் ஒதுங்குவதற்கு இடம் இல்லை.இதனால் மாவட்ட எஸ்.பி.யாக சிபிசக்ரவர்த்தி இருந்தபோது எஸ்.பி.அலுவலகத்தின் முன்புறம் பொதுமக்கள் காத்திருக்கும் வகையில் ஒரு ஷெட் அமைத்து கொடுத்தார்.ஆனா அவர் மாற்றலாகி சென்ற பிறகு அந்த ஷெட்டில் போலீசார் வாகனங்களை நிறுத்தி கொள்கின்றவர். இதனால் பொதுமக்கள் எங்கே அமருவது என தெரியாமல் அந்த பகுதியையே சுற்றி வருகின்றனர்.
மேலும் எஸ்.பி.அலுவலகத்தின் அறை புதுப்பிக்கும் பணி நடந்து வருவதால், பொதுமக்கள் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட உயர் அதிகாரிகள் வரும்வரை பொதுமக்கள் யாரையும் அலுவலகத்தின் உள்ளே அனுமதிப்பதில்லை. அலுவலக நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் மனு அளிக்க வரும் பொதுமக்களை விரட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர். இதனால் அதிருப்தியடையும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடத்திலும், மரத்தடியிலும் தஞ்சமடைகின்றனர். இதில் தாலுகா அலுவலகத்தின் பின்புற பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த கழிப்பிடத்திற்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால், இதுவரை திறக்கப்படாமல் பாழடைந்து கிடக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி.,சக்திகணேசன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.