×

திருப்பைஞ்சீலி கோயிலில் பூட்டியே கிடக்கும் கழிவறைகள் வெளியூர் பக்தர்கள் அவதி

மண்ணச்சநல்லூர், ஏப்.23: திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கழிவறைகள் பூட்டிக் கிடப்பதால் வெளியூர் பக்தர்கள் கடும் சிரமப்படுவதால் கழிவறைகளை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலீயில் நீலீவனேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு எமனுக்கு தனிசன்னதி மற்றும் திருமணம் தடை நீங்க கல்வாழை பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கனோர் வந்து செல்கின்றனர். இத்தலத்தில் நுழைவு வாயிலில் இடதுபுறம் தமிழக அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள் மற்றும் குளியல் அறைகள் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார். ஆனால் இதுநாள் வரை அறநிலையத்துறையினர் இந்த கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல்  பூட்டியே வைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிக அவதிக்குள்ளாவதுடன் சாமி தரிசனத்தை விரைவில் முடித்து கொண்டு அவசர அவசரமாக கிளம்பி விடுகின்றனர். தமிழகத்தில் உள்ள மிக முக்கியஸ்தலமாக விளங்கக்கூடிய தலம் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் ஆலயமாகும். இங்கு கழிப்பறை பூட்டப்பட்டுள்ளது பக்தர்களுக்கிடையே கடும் அதிருப்தியை ஏர்படுத்தியுள்ளது. இது குறித்து கோயம்புத்தூரை சேர்ந்த கல்யாணி (60) கூறியதாவது: எனது மகளுக்கு திருப்பைஞ்ஞீலீயில் உள்ள நீலீவனேஷ்வர சன்னதியில் திருமண தடை நீங்க கல் வாழை பாரிகாரம் செய்வதற்காக கடந்த வாரம் கோயிலுக்கு வந்தோம். இங்கு இயற்கை உபாதை கழிக்க கழிவறை இல்லாமல் நாங்கள் மிக அவதியுற்றோம். எனவே உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Tags : devotees ,Tiruppinjali temple ,stay ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி