மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலம்

மணப்பாறை, ஏப்.23: மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா  கோலாகலமாக நடந்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மையப் பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோயில் உள்ளது. சுமார் 500 ஆண்டு பழமைவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும்  சித்திரைத்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று  மாலை பூச்சொரிதலுடன் துவங்கியது. முன்னதாக வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து  பரம்பரை அறங்காவலர் வீரமணி குடும்பத்தினர்  பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூத்தட்டு ஊர்வலங்கள் கோயிலை வந்தடைந்தன.காந்தி நகர், அண்ணாவி நகர், மதுரை ரோடு, பூதமலைக்கரடு, திருச்சி ரோடு, காளியம்மன் கோயில், அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் முனியப்பன் கோயிலுக்கு வந்து  ராஜ வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தும் கோயில் பரம்பரை அறங்காவலர் வீரமணி, நிர்வாக அதிகாரி பிரபாகர் மற்றும் மணப்பாறை, சுற்றுவட்டார கிராம நாட்டாண்மைகள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மாரியம்மனுக்கு  பூ அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.  மணப்பாறை டிஎஸ்பி ஷர்மு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: