கும்பகோணம், ஏப். 23: சுவாமிமலை காவிரியாற்றில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதை தடுக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. கும்பகோணம் அடுத்த சுவாமிமலை காவிரியாற்றில் தொடர் மணல் கொள்ளை நடந்து வரகிறது. காவிரியாற்றின் கரையோரத்தில் சர்வமானிய தெரு, கள்ளர் தெரு, முராரி காலனி பகுதிகளில் தினம்தோறும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவிரி ஆற்றிலிருந்து கூலியாக ரூ.300 கொடுத்து மணலை இந்த 3 தெருக்களில் உள்ள திடலில் கொட்டி வைத்து விடுவர். பின்னர் மணலை லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் மாலை மற்றும் அதிகாலையில் ஏற்றி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.இதனால் ஆற்றில் பள்ளங்கள் ஏற்பட்டு கட்டாந்தரையாகி விட்டது. மேலும் ஆற்றில் செடி, கொடி, கோரைகள் முளைத்தால் ஆற்றின் போக்கு மாறி ஊருக்குள் தண்ணீர் புகுந்து அப்பகுதியை அழித்து விடும் நிலை ஏற்படும். இதுகுறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தும் மணல் கொள்ளையை தடுக்கவில்லை. லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளுக்கான மாமூலை பெற்று கொண்டு போலீசார் பாதுகாப்பாக மணலை அனுப்பி வைப்பதால் திருட்டுத்தனமாக மணல் கொள்ளையடிக்கும் கும்பல் எந்தவிதமான அச்சமின்றி கடந்த சில மாதங்களாக இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது.