கும்பகோணம், ஏப். 23: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் சப்தஸ்தான (ஏழூர் பல்லக்கு) பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு துவங்கியது.சப்தஸ்தான பல்லக்கு உற்சவம் எனும் ஏழூர் பல்லக்கு விழா ஒரு தலத்தை சுற்றியுள்ள ஊர் மக்களுடைய ஒற்றுமை வளர்ச்சிக்கான விழாவாகும். ஏழூர் பல்லக்கை தரிசித்தால் ஏழு பிறப்பிற்கும் வேண்டிய எண்ணற்ற புண்ணியங்கள் கிட்டும் என்பது ஐதீகம். தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு, சக்கராப்பள்ளி, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இந்த உற்சவம் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சப்தஸ்தான (ஏழூர் பல்லக்கு) பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பட்டு திருக்கலயநல்லூர் எனும் சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆவுடையநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாத சுவாமி கோயில் ஆகிய 7 கோயில்களுக்கு சென்று விட்டு நேற்று (22ம் தேதி) இரவு ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது.