புதுக்கோட்டை, ஏப்.23: வடவாளம், செட்டியாபட்டி, பாத்திமாநகர், அரசடிபட்டி, கும்மங்குளம் வழியாக புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடிக்கு பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டியில் போட்ட மனுவில் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கடந்த 18ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் பதிவான வாக்குகள் வருகிற மே மாதம் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாததால், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள மனுக்கள் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள மனுக்கள் பெட்டியில் வடவாளம் ஊராட்சியை சேர்ந்த வடவாளம், செட்டியாபட்டி, பாத்திமாநகர், அரசடிபட்டி, கும்மங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போட்ட மனுவில், நாங்கள் ஆலங்குடிக்கு செல்ல வேண்டும் என்றால், புதுக்கோட்டைக்கு வந்துதான் செல்ல வேண்டிய நிலைய உள்ளது. இதனால் எங்களுக்கு காலம் மற்றும் பணம் விரயம் ஏற்படுகிறது. எனவே புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடிக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வடவாளம், செட்டியாபட்டி, பாத்திமாநகர், அரசடிபட்டி, கும்மங்குளம் வழியாக பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு பஸ் இயக்கப்படுவதால் பொதுமக்கள், பூ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள் போன்றவர்கள் பயன்பெறுவார்கள் என கூறியுள்ளனர்.