×

போச்சம்பள்ளி அருகே மின்கம்பத்தில் லாரி மோதியதால் இருளில் மூழ்கிய கிராமங்கள்


போச்சம்பள்ளி,  ஏப்.23: போச்சம்பள்ளி அருகே தருமதோப்பு கிராமத்தில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், 4  மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கிராம மக்கள்  விடிய விடிய அவதிக்குள்ளாகினர். போச்சம்பள்ளியில்  இருந்து காவேரிப்பட்டணம்  செல்லும் சாலையில் தருமதோப்பு கிராமம் உள்ளது.  இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளியில் இருந்து செல்லம்பட்டி நோக்கி தருமதோப்பு தேசிய நெடுஞ்சாலை வழியாக கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. அப்போது டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது  பயங்கரமாக மோதியது. இதில் புளிய மரத்தின் கிளை முறிந்து, லாரியின்   மீது விழுந்தது. தொடர்ந்து சென்ற லாரி,  எதிரே இருந்த மின்கம்பம் மீது மோதி  விபத்துக்குள்ளனது.

அதில் அடுத்தடுத்த 4 மின்கம்பங்கள் முறிந்து  விழுந்தன. இதனால் தருமதோப்பு, காவல் குடியிருப்பு, ஜம்புகுட்டப்பட்டி ஆகிய  பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கிராமங்கள் இருளில்  மூழ்கின.  இதுகுறித்த தகவல் அறிந்த போச்சம்பள்ளி மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக சம்பவ  இடத்திற்கு சென்று, லாரி டிரைவர் அந்தோணிராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். மின் வாரியத்திற்கு இழப்பீடு தொகையை வழங்குவதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து, கன்டெய்னர் லாரியை எடுத்துச்செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து நேற்று காலை வந்த மின்வாரிய ஊழியர்கள், உடைந்த மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுளளனர்.

Tags : town ,Pochampalli ,
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது