பெரம்பலூர்,ஏப்.23: அரசு பஸ்களில் அசத்தும் படியான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் டிரைவர் கண்டக்டர்கள் சொந்த செலவில் பயணிகளுக்கு சொல்லும் மெசேஜிற்கு வழியெங்கும் வரவேற்பு.பொதுவாக அரசு பஸ்களில் கரம்சிரம் புறம் நீட்டாதீர், புகை பிடிக்காதீர்கள், ஓடும் பஸ்சிலிருந்து இறங்காதீர்கள், படியில் பயணம், நொடியில் மரணம் போன்ற வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இது அரசு சார்பாக அனைத்து பஸ்களிலும் திருக்குறளோடு எழுதப்பட்டிருக்கும். தனியார் பஸ்களோடு வசூலில் போட்டிபோட வேண்டிய கட்டாயத்திலுள்ள கண்டக்டர்கள், டிரைவர்கள் மட்டும் கடந்த சிலஆண்டுகளுக்கு அரசு பஸ்களில் தனியார் பஸ்களை போன்று, டிவி வைத்து கேசட்டுகள் மூலம் வீடியோ பாடல்களை ஒளிபரப்புவது, ஆடியோ கேசட்டுகளை கொண்டு பாடல்களை ஒலிபரப்புவது என ரெகுலர் பயணிகளை அசத்தியபடி செல்வார்கள். இது பெரும்பாலும் சம்மந்தப்பட்ட ரூட்டில் செல்லக்கூடிய பஸ்சின் டிரைவர், கண்டக்டர்கள் கூட்டுமுயற்சியால் மட்டுமே அரங்கேறி வந்தன.
இதில் மிக வித்தியாசமாக பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் சிலகண்டர்கள், டிரைவர்கள், இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டச்செய்து அசத்தி வருகின்றனர். குறிப்பாக 2 மாதத்திற்கு முன்பு பெரம்பலூர் அரசுப் போக்குவரத்துக்கழக டெப்போவுக்கு வழங்கப்பட்ட புதுபஸ்களில் அதில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் விழிப்புணர்வு ஸ்டிக்டர்கள் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.இதன்படி பெரம்பலூரிலிருந்து திருச்சி வழியாக கோவை செல்லுகிற அரசு பஸ்சில் மரம்வளர்ப்போம், மழை பெறுவோம், இயற்கையை நேசிப்போம், பசுமையைக்காப்போம் என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
வெறுமனே பொழுது போக்கிற்காக சினிமா பாடல்களை ஒலிபரப்பி செல்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டிய பெரம்பலூர், திருச்சி, கோவை செல்லும் அரசுபஸ் கண்டக்டர், டிரைவர்களுக்கு டெப்போவில் மட்டுமன்றி, செல்லும் வழியெங் கும் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.