கிருஷ்ணகிரி, ஏப்.23: கிருஷ்ணகிரியில் கோடைகால சிலம்ப பயிற்சி நடக்க உள்ளதாக சிலம்பாட்டக்கழக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் சிலம்பாலயா சிலம்ப கலைக்கூடம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம் பயிற்சி முகாம் மே 10ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. பயிற்சிக்கு ₹150 கட்டணம் செலுத்த வேண்டும். தினமும் காலை, மாலை பயிற்சி நடைபெறும். 5 முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கு சிலம்ப பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிவில் மாவட்ட சங்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மற்ற முக்கிய விளையாட்டுகளுக்கு கிடைக்கும் அனைத்து சிறப்பு சலுகைகளும், சிலம்ப விளையாட்டிற்கும் பொருந்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.