தேன்கனிக்கோட்டை, ஏப். 23: தேன்கனிக்கோட்டை பகுதியில் தக்காளி விலை கிடு கிடு என உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் பகுதியில், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள், தக்காளி பயிர் செய்து வருகின்றனர். இவர்கள் நாட்டு தக்காளி, வீரியரகம் (ஐபிரிட் வகை) அதிக மகசூல் தரும் தாக்காளி வகைகளை சொட்டுநீர் பாசனம் முறையில் அதிகமாக பயிர் செய்கின்றனர். தக்காளி நாற்று நடவு செய்த மூன்று மாதத்தில் பழம் பறிக்க தொடங்கி விடலாம்.
கடந்த ஆண்டு ஜனவரி முதலே தக்காளிக்கு போதிய விலை கிடைக்காமல் 20 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ₹150முதல் ₹250வரை மட்டுமே விற்பனையானது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வந்தனர். இந்நிலையில் போதிய மழையின்றி ஏரி, குளங்கள், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டதால் தக்காளி சாகுபடி, கடந்த ஜனவரி மாதம் முதல் குறைந்தது. மேலும் கடும் கோடை வெயிலால் செடிகளிலேயே தக்காளி காய் மற்றும் பழங்கள் அழுகி விடுவதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்து தக்காளி விலை சற்று ஏறுமுகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது 20கிலோ எடைகொண்ட ஒரு கூடைக்கு ₹600 முதல் ₹700 வரை விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை சரிந்து வந்த தக்காளி கிடுகிடு என விலை உயர்ததால், தக்காளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.