×

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் விவசாயிகள் கோடை உழவு செய்யலாம்

கிருஷ்ணகிரி,  ஏப்.23:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால்,  கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்பு  விடுத்துள்ளார். இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  பச்சையப்பன் கூறியதாவது:
கோடை உழவு செய்வதால் மண்ணின் அடியில் உள்ள  பயிர்களை உண்ணும் மற்றும் பல நோய்களை கடத்தும் பூச்சிகளின் முட்டைகள், இளம்  புழுக்கள், கூட்டு புழுக்கள் ஆகியவை வெளியே கொண்டு வரப்பட்டு சூரிய ஒளி  மற்றும் வெப்பத்தால் கொல்லப்படும். மண்ணில் இருந்து வெளிவரும் சிறு  புழுக்கள், கூட்டு புழுக்களை பறவைகள் தின்று அவற்றை அழித்து விடுவதால்,  அடுத்த சாகுபடி செய்யும் பயிரில் நோய் தாக்குதல் இயற்கையாகவே  கட்டுப்படுத்தப்படுகிறது.

நன்கு ஆழமாக உழவு செய்யும் போது, கீழ் மண்  மேலாகவும், மேல் மண் கீழாகவும் மாறும்போது மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக  விரவுவதால்,  சத்து பற்றாக்குறை பிரச்னை குறைய வழி ஏற்படுகிறது. கோடை உழவு  செய்த பின்னர், மண் மாதிரி எடுத்து  ஆய்விற்கு அனுப்பும் போது, ஆய்வு  முடிவுகள் மிகவும் சரியாக இருக்கும். மண் வளம் மற்றும் சத்து மேலாண்மை  எளிதாகும். மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் வேர்கள் எளிதில் வளர்வதுடன்,  சத்துக்கள் பயிருக்கு எளிதாக கிடைப்பதால், நல்ல வளர்ச்சி  கிடைக்கும். மண்ணில் இறுக்கம் குறைந்து, மழை நீர் எளிதில் ஊடுருவி மண்ணில்  நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப்படுகிறது.

மழை நீர் மண்ணில்  சேமிக்கப்படுவதால், மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. மேலும், மண்  அரிமானம் தடுக்கப்படுகிறது. மறு உழவு செய்யும் போது, களை செடிகள் மடக்கி உழப்பட்டு,  மீண்டும் களைகள் வளராமல் தடுக்கப்படுகிறது. களை மேலாண்மை செலவு மற்றும்  நேரம் சேமிக்கப்படுகிறது. களை செடிகள் இயற்கை எருவாக்கப்படுகிறது. எனவே,  அனைத்து விவசாயிகளும், இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

Tags : Krishnagiri ,region ,peasants ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்