நாகை, ஏப்.23: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு மஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் தென் கிழக்கு அசியாவை அதிர செய்திருக்கிறது. கிறிஸ்தவ பெருமக்கள் தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தபோது புனித ஆண்டனி தேவாலயம் உட்பட 4 தேவாலயங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் இது வரை 30க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த பயங்கர செயலை வன்மையாக கண்டிக்கிறோம். முன்பு இலங்கையில் கோயில்களும், பள்ளிவாசல்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. இப்போது தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கை அரசு இப்பயங்கரவாத செயலில் ஈடுப்பட்டவர்களை கண்டறிந்து கடும் தண்டணை வழங்கிட துரிதமாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். இலங்கை பொதுமக்கள் அமைதியை பேணும் வகையில் ஒற்றுமையுடன் செயலாற்றிட வேண்டிய தருணம் இது என்பதை சுட்டிகாட்டி அவர்கள் அனைவருக்கும் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தமிமுன்அன்சாரி தெரிவித்துள்ளார்.