சென்னை: சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ரயில்வே பார்சல் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர், சரக்கு வேனில் பார்சலுடன் வந்தார். ‘இந்த பார்சலை டெல்லிக்கு அனுப்ப ஹவுரா மெயில் எக்ஸ்பிரசில் புக்கிங் செய்யவேண்டும்’’ என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், ரயில்வே போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவர் கொண்டு வந்திருந்த வேனில் சோதனை செய்தபோது 600 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதனால் அவரை ரயில்வே காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது, சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் (40) என தெரிந்தது. அவரிடம் இருந்து செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை யாருக்கு எடுத்துச் சென்றார், சென்னையில் யாரிடம் வாங்கினார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபற்றி தேனாம்பேட்டை வனச்சரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து விசாரித்த பிறகுதான் எங்கிருந்து செம்மர கட்டைகள் கொண்டுவரப்பட்டது என்று தெரியவரும். சென்னையில் இருந்து டெல்லிக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.