×

கடையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் கிராம மக்கள் அவதி

கடையம், ஏப். 23:  கடையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடையம் அருகே  ஏ.பி.நாடானூர் விலக்கில் இருந்து ஏ.பி.நாடானூர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை, பல ஆண்டுகளாக உருக்குலைந்து காணப்பட்டது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்த நிலையில், கடந்த மாதம் சாலை பணிகள் துவங்கியது.
இதற்காக பழைய சாலை பெயர்க்கப்பட்டது. இதில் மண் கொட்டி ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு அதன் மீது தார் சாலை அமைக்க ேவண்டும். ஆனால் சாலை பெயர்க்கப்பட்ட பிறகு கடந்த ஒரு மாதமாகியும் எந்த பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.  இந்த சாலையை ஏ.பி.நாடானூர், செல்லபிள்ளையார்குளம், சிவநாடானூர், பண்டாரகுளம், முருகாண்டியூர் உள்பட பல கிராம மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.  தற்போது சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாகி விட்டது.மேலும் அருகிலுள்ள பயணிகள் நிழற்குடைக்கு நடந்து வரும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைவில் தொடங்கி பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road park ,shore ,
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு