திருப்புத்தூர், ஏப்.23: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இரவு பெருமாள் பூப்பல்லக்கில் பவனி வந்தார். திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 10ம் தேதி பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி கொடியேற்றம் நடந்தது. இரவில் காப்புக் கட்டுதலுடன் உற்சவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை மற்றும் இரவில் சுவாமி சிம்மம், அனுமார், கருடசேவை, சேஷ, வெள்ளி யானை, குதிரை, தங்க தோளுக்கியானில், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. 9ம் திருநாளான ஏப்.18ல் மாலை திருத்தேருக்கு தலையலங்கராம் கண்டருளல் நடந்தது. 10ம் திருநாளான ஏப்.19ல் மாலை தேரோட்டம் நடந்தது. 12ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு ஏப்.21ம் தேதி இரவு 9 மணியளவில் சன்னதியில் இருந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பெருமாள் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து கோயிலை அடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.