திருப்பூர், ஏப்.22: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதனால், சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலம் துவங்கியது முதல் தற்போது வரை கடும் வெயில் வாட்டி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு அதிக வெப்ப நிலை நிலவி வருகிறது. இதனால் கோடை காலத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், நேற்று முன்தினம் இரவும் பல்வேறு பகுதிகளில் மழைப் பொழிவு இருந்தது. மேலும், மாநகரப்பகுதியில் சாரல் மழை பெய்தது. அதனால், பல்லடம், மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதியில் சின்ன வெங்காயம், காய்கறிகளுக்கு இந்த மழை பொழிவு சற்று உதவியாக இருந்ததாக சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.