அந்தியூர், ஏப். 22: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பச்சாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று அந்தியூர்-அம்மாபேட்டை செல்லும் ரோட்டில் பள்ளிபாளையம் பிரிவு என்ற இடத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.