உடுமலை,ஏப்.22: உடுமலையில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. வரும் 25ம்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. தினசரி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபடுகின்றனர். விசேஷ பூஜைகளும் நடந்து வருகின்றன. இதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று அதிகளவில் பக்தர்கள் திரண்டனர். இதனால் பொள்ளாச்சி சாலையில் காமராஜர் சிலை முன்பிருந்து, மாரியம்மன் கோயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள், வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. திருப்பூர், தாராபுரம் செல்லும் வாகனங்களும் ஸ்தம்பித்து நின்றன. பக்தர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். போக்குவரத்து போலீசார் இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனவே, திருவிழா முடியும் வரை தளி ரோடு, திருப்பூர் ரோடு கார்னர்களில் போக்குவரத்து போலீசாரை நியமித்து வாகனங்களை ஒழுங்கபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.