காடையாம்பட்டி அருகே வேலை தேடி சென்றபோது விபத்தில் சிக்கிய முதியவர் சாவு

காடையாம்பட்டி, ஏப்.22: தர்மபுரியைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி கோவிந்தன் என்பவர் சொந்த வேலையாக கடந்த 30ம் தேதி சேலம் சென்றுள்ளார். அப்போது, சேலம் பகுதியில் சுற்றி திறிந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அறிமுகமாகியுள்ளார். அவர், தனக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு கோவிதனிடம் கேட்டுக்கொண்டதால் ஐஸ் விற்பனை செய்வதற்காக தர்மபுரிக்கு தனது வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். காடையாம்பட்டி அருகே தாசசமுத்திரம் என்னுமிடத்தில் தீவட்டிப்பட்டி காவல் நிலையம் எதிரே டீ குடிப்பதற்காக சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயமடைந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தனிடம் விசாரித்ததில், வேலை கேட்டு வந்தார். அவர் பெயர் நாராயணன் என்பது மட்டுமே தெரியும். அவரது ஊர், உறவினர்கள் எங்குள்ளனர் என்பது உள்ளிட்ட எந்த விவரமும் தெரியவில்லை என கூறினார். இதைத்தொடர்ந்து முதியவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Related Stories: