முடங்கியது பயோ கேஸ் திட்டம் வீணாகிறது மத்திய அரசின் நிதி

கோவை, ஏப்.22: தமிழகத்தில் பயோ கேஸ் திட்டம் முடங்கி வருகிறது. விரைவில் இந்த திட்டம் பயனாளிகள் இன்றி நிறுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 1987ம் ஆண்டில் சாண எரிவாயு திட்டம் (பயோ கேஸ்) துவங்கியது. மத்திய அரசின் மரபு சாரா எரிவாயு திட்ட துறை மானியத்துடன் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தால் கேஸ் விலை உயர்ந்து வருகிறது. கேஸ் தட்டுபாடு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் சாண எரிவாயு திட்டத்தை தீவிரமாக்க உத்தரவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாண எரிவாயு திட்டத்தை பரவலாக்கவேண்டும். குறிப்பாக விவசாயம், கால்நடை வளர்ப்போர் வீடுகளில் இந்த திட்டத்தை மானியத்துடன் நிறைவேற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி முகமை மூலமாக இந்த திட்டம் ஆரம்ப காலத்தில் தீவிரமாக மேற்ெகாள்ளப்பட்டது. கே.வி.ஐ.சி, தீனபந்து, பிரகதி என்ற பெயரில் பயோ கேஸ் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மத்திய அரசு 9 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கியது. சுமார் 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அதில் இரும்பு டிரம் கவிழ்த்து சாணத்தை கரைத்து ஊற்றினால் அதில் இருந்து மீத்தேன் வாயுவை நேரடியாகவும், சிலிண்டரிலும் சேகரித்து சமையலுக்கு பயன்படுத்தி வந்தார்கள். பெட்ரோலியம் பொருட்களின் மூலமாக கிடைக்கும் சமையல் கேஸ் ஆபத்தான கருதப்பட்டது. மேலும் பாத்திரங்களில் பிசுபிசுப்பு ஏற்பட்டு வந்தது. சாண எரிவாயுவில் அதுபோன்ற குறைபாடு எதுவுமில்லை. விவசாயம் சாராத இடங்களில் கூட குறிப்பாக கேண்டீன், மாணவர் விடுதிகளில் இயற்கையாக கிடைக்கும் காய்கறி, பழங்கள், பழைய சோறு மூலமாக கூட பயோ கேஸ் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலையிருந்தது.

ஆனால் கடந்த 7 ஆண்டாக இந்த திட்டத்தை தீவிரமாக்க தமிழக அரசு முனைப்பு காட்டவில்லை.   கோவையில் 15 இடத்திலும், சேலத்தில் 13 இடத்திலும், ஈரோட்டில் 12, திருப்பூரில் 9, திருச்சியில் 10 என மாநில அளவில் 150க்கும் குறைவான இடத்தில் பயோ கேஸ் திட்டம் செயலாக்க அனுமதி கிடைத்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பயோ கேஸ் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதித்தும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் முடங்கி விட்டது. மரபு சாரா திட்டங்களுக்கான நிதி பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகிறது. மாநில அரசின் அலட்சியத்தால் மத்திய அரசின் பயோ கேஸ் திட்டம் விரைவில் நிறுத்தப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி முகமையினர் கூறுகையில், ‘‘ பயோ கேஸ் திட்டம் பாரம்பரியமானது. விவசாயம், கால்நடை வளர்ப்பு குறைந்து விட்டதால் இந்த திட்டத்தை பரவலாக்க முடியவில்லை. என்றனர்.

Related Stories: