கொள்ளிடம், ஏப்.22: கொள்ளிடம் அருகே புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் நேற்று முன்தினம் கொள்ளிடம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் இளைஞரணி செயலாளர் ரஞ்சித் தலைமையில், பொன்பரப்பி கிராமத்தில் பாமகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியதை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த டிஎஸ்பி வந்தனா, கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.