குருவிகுளம் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

திருவேங்கடம், ஏப். 22:  குருவிகுளம் அருகே அத்திப்பட்டியில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி  அழகிய நகரை சேர்ந்த முருகேசன் மகன் சரவணன் (40). இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அழகியநகரில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்த சரவணன், நேற்று தனது குடும்பத்துடன் குருவிகுளம் அருகே அத்திப்பட்டியில் உறவினர் சண்முகராஜ் என்பவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மதிய உணவருந்திய பிறகு தம்பதியர் உறவினர்களுடன் அத்திப்பட்டியில் உள்ள குளத்திற்கு சென்று குளித்து கொண்டிருந்தனர்.  அப்போது குளத்தின் ஆழப்பகுதியில் காணப்பட்ட சகதியில் சிக்கிக்கொண்ட சரவணன், வெளியே வர முடியாததோடு நீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.

 அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலை அடுத்து விரைந்துவந்த குருவிகுளம் போலீசார், ப கழுகுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் துணையுடன் குளத்தில் மூழ்கி இறந்த சரவணனின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து குருவிகுளம் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் குளத்தில் மூழ்கி சரவணன் இறந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: