தென்காசியில் இரவில் பயங்கரம் வியாபாரி மனைவி வெட்டி கொலை சொத்து தகராறில் உறவினர் தீர்த்துகட்டினார்

தென்காசி, ஏப். 22:    தென்காசி அடுத்த ஆயிரப்பேரி அருகேயுள்ள பாட்டப்பத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற சாமி (55). இவரும், இவரது மனைவி கோமுவும் (50) தென்காசி காய்கனி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தனர். சிதம்பரம் என்ற சாமிக்கும், இவரது அண்ணன் கணேசனுக்கும் சொத்து தகராறு இருந்துவந்தது. இதனிடையே கணேசனின் மறைவுக்கு பிறகு இதுகுறித்து அவரது மகனும், கூலி தொழிலாளியுமான கண்ணன் (20) என்பவரும் சொத்து குறித்து கேட்டதால் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்ட சிதம்பரமும், அவரது மனைவி கோமுவும் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இதை முன்கூட்டியே திட்டமிட்டு வரும் வழியில் உள்ள காட்டுப்பாதையில் பதுங்கியிருந்த கண்ணன், வழிமறித்து தான் தயாராக வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக இருவரையும் வெட்டி விட்டு தப்பியோடினார்.  தகவலறிந்து விரைந்து சென்ற குற்றாலம் போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிதுநேரத்தில் கோமு பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள குற்றாலம் போலீசார், தலைமறைவான கண்ணனைத் தேடி வருகின்றனர்.  சொத்து தகராறில் வியாபாரி மனைவியை உறவினரே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: