விஜயநாராயணம் அருகே வாக்களிக்கச் சென்ற முதியவர் தோட்டத்தில் தவறி விழுந்து சாவு

நாங்குநேரி, ஏப். 22:  விஜயநாராயணத்தை சேர்ந்தவர் கணேசன் (45). கூலித் தொழிலாளி.  இவரது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார் . உடன்பிறந்தவர்கள் அனைவருக்கும் திருமணமாகியதால் தனிக்குடித்துச் சென்றுவிட்டனர். இவரது தந்தை சண்முகசுந்தரம் (80) ராஜகோபாலபுரத்தில் உள்ள பூர்வீகவீட்டில் தனியாக வசித்து வந்தார். சண்முகசுந்தரம், வயது முதிர்வு காரணமாக சற்று மனநிலை பாதித்த நிலையில் முதியோர் உதவித்தொகை பெற்று தனியாக வசித்து வந்தார். மகன் கணேசன், தந்தையை அவ்வப்போது சென்று கவனித்து வந்தார். இதனிடையே மக்களவை தேர்தல் நடந்த கடந்த 18ம்தேதி வாக்களிக்கும்பொருட்டு அங்குள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற சண்முகசுந்தரம் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய எந்தவித தகவலும்  இல்லை.

 இந்நிலையில் மறுநாள் (19ம் தேதி) மாலை அங்குள்ள தனியார் வாழைத்தோட்டத்தில் சண்முகசுந்தரம் இறந்து கிடப்பதாக அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் விஜயநாராயணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து விரைந்துசென்ற எஸ்.ஐ சுப்பிரமணியன் மற்றும் போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார். இதில் வாக்களிக்கச் சென்ற சண்முகசுந்தரம் வழிதவறி வாழை தோட்டத்தில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து உடலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: