பைக்குகள் மோதலில் 3 வாலிபர்கள் பலி

சங்கரன்கோவில், ஏப். 22:  பனவடலிசத்திரம் அருகேயுள்ள நரிக்குடியைச் சேர்ந்த சுப்பையா மகன் ராமர் பாண்டியன் (25). கேரளாவில் கூலி வேலை பார்த்துவந்த இவர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஊருக்கு வந்தார். இதே போல் இவரது நண்பரும், அதே பகுதியைச் சேர்ந்த ராமையா மகனும், கோவையில்  இயங்கும் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவருமான சமுத்திரபாண்டி (23), நரிக்குடியைச் சேர்ந்த  ராமர்பாண்டி மகனும், வன்னிகோனந்தலில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தவருமான அரவிந்த்ராஜ் (25) ஆகிய 3 பேரும் இணைப்பிரியா நண்பர்கள். இவர்கள் 3 பேரும் சங்கரன்கோவிலில் உள்ள தியேட்டரில் இரவு காட்சி பார்க்கும்பொருட்டு நேற்று இரவு  9 மணிக்கு நரிக்குடியில் இருந்து பைக்கில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர்.

 சங்கரன்கோவில் சின்னகோவிலான்குளம் பகுதியை கடந்துசென்றபோது சங்கரன்கோவில் காவேரிநகரை சேர்ந்த இஸ்மாயில் மகனும், கோழி வியாபாரியுமான அப்துல்காதர் (25) என்பவர் பணத்தை வசூலித்து கொண்டு மற்றொரு பைக்கில் எதிரே வந்துகொண்டிருந்தார். சங்கரன்கோவில் அடுத்த குதிரைகோயில் பகுதி அருகே வந்த போது இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களில் ராமர்பாண்டியும், சமுத்திரபாண்டியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அரவிந்த்ராஜையும், அப்துல்காதரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அரவிந்த்ராஜ் சிறிதுநேரத்தில் இறந்தார். மேல் சிகிச்சைக்காக அப்துல்காதர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: