பெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை

புதுச்சேரி, ஏப். 22:  படிப்புக்கு ஏற்ற வேலை, சம்பளம் கிடைக்காததால் எம்டெக் பெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை நெல்லித்தோப்பு அண்ணா நகர் 12வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாரி ஜோசப் (70). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். அவ்வப்போது பிரான்ஸ் நாட்டுக்கு சென்று வருவார். இவரது ஒரே மகள் பிரியதர்ஷினி (25). எம்டெக் முடித்து விட்டு சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சம்பளம் குறைவாக இருந்ததால் வேலையில் இருந்து நின்று விட்டார். அதன்பிறகு படிப்புக்கேற்ற அதிக சம்பளத்துடன் கூடிய வேலையை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. இது பற்றி தனது தந்தையிடம் விரக்தியுடன் கூறி வந்துள்ளார். அப்போது மகளுக்கு தந்தை ஆறுதல் கூறி வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரியதர்ஷினி திடீரென விஷத்தை குடித்து விட்டார்.

உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விஷம் குடிப்பதற்கு முன்பாக பிரியதர்ஷினி ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்ததாகவும், திடீரென தன்னை கீழ்மட்டத்தில் வேலை செய்யுமாறு நிர்வாகம் உத்தரவிட்டதால் வேலையை ராஜினாமா செய்ததாகவும், இதனால் மனஉளைச்சல் இருந்து வந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார். அந்த கடிதத்தை உருளையன்பேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், படிப்புக்கு ஏற்ற வேலை, ஊதியம் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது காதல் தோல்வி காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Related Stories: