நெய்வேலி, ஏப். 22: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் மந்தாரக்குப்பம், பெரியாக்குறிச்சி என்.எல்.சி ஆர்ச் கேட் வடக்குத்து ஊராட்சி போன்ற பகுதிகளில் உள்ள சிறு கடைகள், பெரிய கடைகள், வாரச்சந்தையில் பல
சரக்கு மற்றும் காய்கறி கடைகள் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடை கற்களை பயன்படுத்தி வியாபாரிகள் பொருட்களை எடை போட்டு விற்பனை செய்து வந்தனர். இதில் பெரும்பாலான கடைகளில் கற்களில் முத்திரை இருப்பது இல்லை. மேலும் எடை கற்கள் நாளடைவில் தேய்ந்து விடுவதால் கிலோவுக்கு 100 கிராம் வரை பொருட்களின் எடை குறைகிறது. எனவே வியாபாரிகள் பழைய எடைகற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து பெரும்பாலான பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளில் எலக்ட்ரானிக் தராசுகளை பயன்படுத்தும்முறை அமலுக்கு வந்தது. எலக்ட்ரானிக் தராசுகளில் பொருட்களை வைத்தவுடன் அதன் எடை டிஜிட்டல் போர்டில் நம்பராக தெரியும். இதனால் வாடிக்கையாளர்கள் சரியான எடையில் பொருட்கள் இருப்பதாக நினைத்து வாங்கி செல்கின்றனர். ஆனால் அதிலும் தற்போது எடை குறைவாக இருப்பதாக புகார் எழுந்து வருகிறது. எனவே கடைகளில் உள்ள எலக்ட்ரானிக் தராசுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாரச்சந்தையில் உள்ள காய்கறி கடையில் ஒரு கிலோ தக்காளி வாங்கியபோது எலக்ட்ரானிக் தராசில் 1,050 கிராம் என காட்டியது. காய்கறி கடைக்காரர் பொருளை கூடுதலாக தருவதாக எண்ணி வாங்கிச் சென்றேன். ஆனால் மற்ற கடைகளில் அதை எடை போட்டுப் பார்த்தபோது அதில் 850 கிராம் குறைத்து காட்டியது. உடனடியாக அந்த கடைக்காரரிடம் போய்க் கேட்டபோது அவர் முறையாக பதிலை கூறவில்லை. இதனால் எலக்ட்ரானிக் தராசுகளிலும் முறைகேடு நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற முறைகேடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அனைத்து கடைகளிலும் உள்ள எலக்ட்ரானிக் தராசுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.