வாணியம்பாடி, ஏப்.22: வாணியம்பாடி அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மின்னல் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்தது. மேலும், 4 ஆயிரம் வாழை மரங்கள் சேதமானது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கோடை மழை பெய்தது. வாணியம்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில், மேல்நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45). இவர் தனக்கு சொந்தமான 2 பசுக்களை வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மின்னல் தாக்கி 2 பசுக்களும் கருகி இறந்தது. இதுகுறித்து, தகவலறிந்த வாணியம்பாடி தாசில்தார் முருகன், ஆர்ஐ சம்பங்கி மற்றும் விஏஓ அகிலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.