சென்னை: தி.நகர் நடைபாதை வாளகத்தை சுற்றியுள்ள 14 சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்த சென்னை மாநராட்சி திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பூங்கா, போக்குவரத்து விதிகளை அறிந்துகொள்ளும் வகையில் போக்குவரத்து பூங்கா, சைக்கிள் ஷேரிங் திட்டம், பல் அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரூ.33 கோடி செலவில் தி.நகரில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பனகல் பூங்கா சாலை, போக் சாலை, தணிகாசலம் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நடபாதை வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர்த்து வடக்கு உஸ்மான் சாலை, வெங்கட் நாராயணா சாலை உள்ளிட்ட சாலைகள் ஸ்மார்ட் சாலைகளாக மேம்படுத்தபட உள்ளது. இதற்காக ரூ.5.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடைபாதை வளாகத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பாண்டிபஜார் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.