நெல்லை அருகே டாஸ்மாக்கில் ரூ.68 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை

மானூர், ஏப். 21:  நெல்லை அருகே அழகியபாண்டியபுரம் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.68 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் டாஸ்மாக் கடை (எண் 10904) உள்ளது. இங்கு சூபர்வைசராக ரவி (46), உதவி சூபர்வைசராக உய்காட்டான் (46) பணியாற்றி வருகின்றனர். விற்பனையாளராக கணேசன், கைகொண்டான், மற்றொரு கணேசன் ஆகியோர் உள்ளனர். இந்த கடையில் தினமும் ரூ.2 லட்சம் வரை மது விற்பனை நடைபெறும்.மக்களவை தேர்தலையொட்டி கடந்த 15ம் தேதி கடை மூடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மதியம் கடையை திறக்க சூபர்வைசர் ரவி மற்றும் ஊழியர்கள் சென்றனர். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து மானூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்துவந்து விசாரணை நடத்தினர். கடை மூடப்பட்ட அன்று 23 லட்சத்து 41 ஆயிரத்து 730 ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களும், ரொக்கமாக ரூ.28,250ம் இருந்தது. அதனை சரிபார்த்த போது ரூ.68,320 மதிப்பிலான மதுபாட்டில்கள் மட்டும் கொள்ளை போனது தெரிய வந்தது.  சம்பவம் பற்றி சூபர்வைசர் ரவி கொடுத்த புகாரின் பேரில், எஸ்ஐ மாடசாமி வழக்கு பதிந்து டாஸ்மாக்கில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை தேடி வருகிறார்.

Related Stories: