பூத் ஏஜென்டுகள் தாக்கப்பட்ட விவகாரம் உறவினர்கள் மறியல் முயற்சி

வாழப்பாடி, ஏப்.21:  வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட இடையப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வாக்குச்சாவடி அறை எண் 14ல் திமுக சார்பில் மணிகண்டன், சரவணன் ஆகியோர் பூத்  ஏஜென்டாக இருந்தனர். அப்போது, காலை 10.30 மணிக்கு அதிமுக, தேமுதிக, பாமக கட்சியைச் சேர்ந்த சிலர் முறைகேடாக வாக்களிக்க முயன்றனர். இதனை தடுத்த மணிகண்டன், சரவணன் மீது அவர்கள் ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில், தேர்தல் பணி முடித்து விட்டு இரவு 9 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்ட இருவர் மீதும் 20க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில், அவர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சரவணன், மணிகண்டனின் உறவினர்கள் வாழப்பாடி-கருமந்துறை சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் ஏத்தாப்பூர் போலீசார் விரைந்து சென்ற பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: