ஓய்வு எச்எம் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

துறையூர், ஏப்.21:   துறையூர் தெப்பக்குள தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி செந்தமிழ் பூங்கொடி(70), மகன் கார்த்திகேயன்(36), டிராவல்ஸ் உரிமையாளர். இவர்கள் மூவரும் கடந்த 16ம் தேதி இரவு தனது வீட்டில் கீழுள்ள கதவை பூட்டிவிட்டு மாடியில் சென்று தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கீழ் கதவு பூட்டை உடைத்து மேலே சென்று, தூங்கிக்கொண்டிருந்த செந்தமிழ் பூங்கொடி கழுத்தில் கிடந்த 12 பவுன் தாலி ெசயினையும்,  மகன் கார்த்திகேயன் கழுத்திலிருந்த 3 பவுன் செயினையும்  லாவகமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தூக்கக் கலக்கத்தில் இருந்த கார்த்திகேயன் கீழ் வீட்டில் சத்தம் கேட்பதை கண்டு கீழே இறங்கி வந்த பார்த்தபோது டவுசர் அணிந்த ஒருவன் வீட்டிலிருந்து தப்பியோடுவதை கண்டார். அப்போது தனது கழுத்தில் போட்டிருந்த நகையையும் காணவில்லை என்பதையறிந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மர்ம நபரை துரத்தியபோது, அருகில் உள்ள பெரிய ஏரி பகுதியில்  சென்று மாயமானார். நள்ளிரவு என்பதால் ஏரியினுள் இறங்கி தேடியும் மர்ம நபர் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து கடந்த 17ம் தேதி துறையூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். தேர்தல் சமயம் என்பதால் தேர்தல் முடிந்த பின்பு விசாரணை செய்யப்படும் என்று துறையூர் போலீசார் கூறியதையடுத்து நேற்று மீண்டும் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். துறையூர் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: திருச்சி காஜாமலை லூர்துசாமி பிள்ளை காலனியை சேர்ந்தவர் செல்வம் மகன் இளங்கோ(37), கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு சென்று விட்டு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் குடியை கடந்த 2 மாதத்திற்கு முன் நிறுத்தினார். குடியை நிறுத்தியதால், வயிற்று வலி எடுக்க துவங்கியது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இதில் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தந்தைக்கு கத்திக்குத்து: மகன் கைது: திருச்சி காஜாபேட்டை கீழ கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(45), லோடுமேன்.

இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல இரவு போதையில் வந்த நாகராஜன்,  மனைவி ரங்கம்மாளிடம் தகராறு செய்து தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன் மகன்  மோகனசுந்தரம்(20) தந்தை நாகராஜனை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த நாகராஜன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மோகனசுந்தரத்தை கைது செய்தனர். ஸ்டவ் வெடித்து ஒருவர் பலி: தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(54). இவர் வீட்டில் பம்ப் ஸ்டவ்வில் மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்தபோது ஸ்டவ் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் சிவப்பிரகாசம் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி சிவப்பிரகாசம் இறந்தார்.  இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

பைக் மீது ஆட்டோ மோதி வாலிபர் பலி:  தொட்டியம் அருகே குளத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுமணி(25), டிரைவர்.

இவர்  நேற்று சொந்த வேலையாக  தொட்டியம் அருகே கிடாரமங்கலம் எல்லைமேடு அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியது. இதில் பொன்னுமணி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக மருதம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முரளி என்பவரை காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து: 2 பேர் பரிதாப பலி: மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே சேசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(35). இவர் நேற்று வையம்பட்டி வாரச்சந்தையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு சுங்கச்சாவடி அருகே பஸ்சில் வந்திறங்கி நடந்து சென்றவர் மீது திண்டுக்கல்லிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை பலியானார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் ஏழுமலையின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 இதேபோல, மருங்காபுரியை அடுத்த சமத்துவபுரம் அருகே திருச்சி-மதுரை மெயின் ரோட்டில் 70 வயது அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: