×

ஆரணி அருகே பரபரப்பு மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் கைது

ஆரணி, ஏப்.21: ஆரணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த எம்பிதங்கள் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரது தாய் இறந்துவிட்டார். இதனால் அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் இளம்பெண் வசித்து வருகிறார். மேலும், உறவினர் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளை அதே பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இளம்பெண் மேய்ப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் இளம்பெண் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு பேர் இளம்பெண்ணை மடக்கி பிடித்து காட்டுப்பகுதியின் மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இளம்பெண் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் அவரது உறவினர் சுப்பிரமணி என்பவர் அவரை தேடி காட்டுப்பகுதிக்கு வந்தார். அப்போது, இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தபோது, அதே கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முருகன்(53), ரேணுகோபால்(61) ஆகிய இருவரும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தெரிந்தது. இந்நிலையில் சுப்பிரமணியை பார்த்த இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து உடனடியாக இளம்பெண்ணை மீட்டு சுப்பிரமணி வீட்டிற்கு அழைத்து வந்தார். இதுகுறித்து இளம்பெண்ணின் உறவினர் ஜகதா(48) ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிந்து முருகன், ரேணுகோபால் ஆகியோரை கைது செய்தார்.

விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோல் இளம்பெண்ணை மிரட்டி காட்டிற்குள் தூக்கிச்சென்று பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் கர்ப்பமானதும், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கருசிதைவு ஏற்பட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் ஆரணி கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : men ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்