பூத் சிலிப் இல்லாததால் வாக்காளர்கள் அவதி

கோவை, ஏப். 19: கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பூத் சிலிப் கிடைக்காமல் வாக்காளர்கள் அவதியடைந்தனர். வாக்கு சாவடி எண், வரிசை எண், பாகம் எண், வாக்காளர்களின் வாக்குசாவடி அமைவிடம்,  உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பூத் சிலிப் கடந்த 15 நாட்களாக கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அலுவலர்கள் வழங்கி வந்தனர். இதில் ஊரக பகுதிகளில் பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்ட நிலையில் நகரில் பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாததால் பெரிதும் அவதியடைந்தனர்.  பூத் சிலிப் இல்லாதவர்கள் அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பூத் சிலிப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும், பொதுமக்களுக்கு முறையாக அறிவிப்புகள் சென்று சேராததால் கடும் அவதியடைந்தனர். இதே போல பூத் சிலிப் பெற்றுக்கொண்ட வாக்காளர்களில் சிலர் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வராததால் திருப்பி அனுப்பபட்டனர். பின்னர் வேறு வழியின்றி வீட்டிற்கு சென்று உரிய ஆவணங்களை கொண்டு வந்து வாக்களித்தனர்.

Related Stories: