ஆலந்தூர்: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு தாமதமானது.குறிப்பாக நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க காலையிலேயே மக்கள் திரண்டனர். அங்குள்ள மின்னணு இயந்திரம் பழுதடைந்ததால் ஒன்றரை மணிநேரம் வாக்குப் பதிவு தாமதமானது. அதேபோல், ஆதம்பாக்கம் இந்திராகாந்தி பள்ளியிலும் இயந்திர கோளாறால் 45 நிமிடம் வாக்கு பதிவு பாதிக்கப்பட்டது. ஆலந்தூர் இந்து மத பாடசாலையில் அரை மணிநேரமும், ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ். மேல்நிலை பள்ளியில் 1 மணி நேரமும் வாக்குப்பதிவு தடைபட்டது.தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதம்பாக்கத்தில் உள்ள பிரிட்டோ அகாடமி தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப் பதிவு தொடங்கியது. 220 வாக்குகள் பதிவான நிலையில் திடீரென மீண்டும் மின்னணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு மீண்டும் 1 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் சரி செய்யப்பட்டது.