சென்னை: மோடியிடம் தமிழக அரசுதான் அடிமையாக இருக்கிறது என்றால், தற்போது தேர்தல் ஆணையமும் அடிமையாகிவிட்டது என்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், நந்தனத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 9.45 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் அவரது தாய் மல்லிகா மாறன், மனைவி ப்ரியா தயாநிதி மாறன், மகள் திவ்யா தயாநிதி மாறன் ஆகியோரும் வாக்களித்தனர். அதேபோன்று அவரது மகள் திவ்யா தனது முதல் வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களித்த பின்னர் வெளியில் வந்த தயாநிதி மாறன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த நாள் முக்கியமான நாள். 5 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு பல்வேறு வேதனைக்குள்ளாக்கப்பட்டோம். மோடியின் ஆட்சியில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழ்நாடு முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டது. வாக்குறுதிகள் பல சொன்னாலும் அதை எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை. இந்த நிலை மாற வேண்டும். 2004ல் 40க்கு 40 வென்றோம். அப்போது பல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது.