தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்குச்சாவடி பற்றி தவறான தகவல்....வாக்காளர்கள் அலைக்கழிப்பு

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மடிப்பாக்கம் பகுதியில் பாகம் 66ன் வாக்குச்சாவடி, புனித தோமையர்மலை பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, மடிப்பாக்கம் தெற்கில் உள்ளதாக தமிழக தேர்தல் ஆணைய வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் நகலை எடுத்துக்கொண்டு, வாக்காளர்கள் நேற்று அந்த பள்ளிக்கு சென்று வாக்குச்சாவடியை தேடியபோது, பாகம் 66ன் வாக்குச்சாவடியை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, பாகம் 66ன் வாக்குச்சாவடி மடிப்பாக்கம் மேற்கு, கிங்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உள்ளதாக தெரிவித்தனர்.

இதனால் வாக்காளர்கள் ஒரு கி.மீ தூரம் தொலைவில் உள்ள கிங்ஸ் பள்ளிக்கு சென்று வாக்களித்தனர். மடிப்பாக்கம் வட்டாரத்தில் புனித தோமையர் என்ற பெயரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. இதனால் மொத்தம் மூன்று பள்ளிகளைச் தேடிச் சென்று, வாக்குச்சாவடியை கண்டுபிடிக்கும் நிலைக்கு வாக்காளர்கள் தள்ளப்பட்டனர். அரசு இ-சேவை மையங்களில் பணம் செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற முயன்றவர்களுக்கு, சோழிங்கநல்லூர் தேர்தல் அலுவலகத்தில் விண்ணப்பித்து கையெழுத்து பெற்று வந்தால்தான், டூப்ளிகேட் அடையாள அட்டை கிடைக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். நெடுந்தூரம் அலைய வேண்டியிருப்பதால், பல வாக்காளர்கள் வண்ண அட்டை பெறும் முயற்சியை கைவிட்டனர்.

Related Stories: