×

கஞ்சனூரில் வாக்களிக்க சென்ற திமுகவினரை தடுத்து தாக்கிய அதிமுகவினர்

கும்பகோணம், ஏப். 19: மயிலாடுதுறை மக்களவை தொகுதி தேர்தல் நேற்று நடந்தது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கஞ்சனூர் கோட்டூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் திமுகவினர் வாக்களிக்க சென்றனர். அப்போது அதிமுகவினர், ஒரு சமூகத்தை சேர்ந்த திமுகவினரை வாக்களிக்காத வகையில் தகராறு செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கைகலப்பானதால் வாக்குச்சாவடிக்கு வந்திருந்த வாக்காளர்கள் அலறியடித்து கொண்டு வாக்குச்சாவடியிலிருந்து வெளியே ஓடினர். அப்போது வாக்குச்சாவடிக்குள் இருந்த தேர்தல் அலுவலர்கள் அச்சத்துடன் அங்கேயே பதுங்கினர். இந்த மோதலில் இருதரப்பிலும் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து வெளியில் அனுப்பினர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருப்பனந்தாள் அடுத்த மரத்துறை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாமகவினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் 30 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் போலீசார் சமாதானம் செய்து வைத்து வாக்குப்பதிவை துவங்கினர்.

Tags : AIADMK ,DMK ,Kanjanoor ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...