நாமக்கல், ஏப். 19: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காளியப்பன், நேற்று காலை ராமாபுரம்புதூரில் உள்ள வாக்கு சாவடிக்கு தனது மகன் ராஜாவுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள் எனக்கு வெற்றியை தேடி வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் பிரசாரம் எனது வெற்றியை உறதி படுத்தியுள்ளது. தொகுதி முழுவதும் சென்று அனைத்து வாக்காளர்களையும் சந்தித்துள்ளேன் என்றார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி நேற்று அவரது சொந்த ஊரான கோவிந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குசாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் நேற்று காலை 7.20 மணிக்கு தனது மனைவி உமாவுடன் சென்று அர்த்தனாரி துவக்கப் பள்ளியில் வாக்களித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன், தனது மனைவி வசந்தியுடன் வந்து, நாமக்கல் தெற்கு ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். நாமக்கல் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஸ்குமார் கட்டநாச்சம்பட்டி வாக்கு சாவடியிலும், முன்னாள் எம்பி ராணி நாமக்கல் தெற்கு பள்ளி வாக்குசாவடியில் வாக்களித்தார்.