ஆம்பூர், ஏப்.19: ஆம்பூரில் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் அமமுக வேட்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் 2 பேருக்கு மண்டை உடைந்தது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான பாலசுப்பிரமணியம் போட்டியிடுகிறார். இவர் நேற்று மாலை தனது காரில் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக சென்றார். அப்போது ஆம்பூர் கஸ்பா ‘பி’ பகுதி வாக்குச்சாவடிக்கு செல்ல கஸ்பா முத்தாலம்மன் கோயில் அருகே வந்தார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அமமுக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும், அங்கிருந்த அதிமுகவினர் சிலர் பாலசுப்பிரமணியத்தின் கார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது.இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் மற்றும் அதிரடிப்படையினர் அங்கு விரைந்து வந்தனர். மோதலில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், இரு தரப்பினரிடையே அடிதடி மற்றும் மோதல் தொடர்ந்ததால் போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தனர். இதில் ஆம்பூரை சேர்ந்த டேவிட் மற்றும் சுதர்சன் ஆகியோருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும், சிலர் லேசான காயங்களுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.