திண்டிவனம், ஏப். 19: தமிழகத்தில் மக்களவை தேர்தல் நேற்று 38 தொகுதிகளில் நடைபெற்றது. விழுப்புரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திண்டிவனம் சட்டசபை தொகுதியில் உள்ள 264 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி திண்டிவனம் அரசு கிளை நூலகம், எண்டியூர் ஆரம்ப பள்ளி, தென்பசியார் நடுநிலைப்பள்ளி, சாரம் நடுநிலைப்பள்ளி ஆகிய நான்கு வாக்குச்சாவடிகளை மாதிரி வாக்குச்சாவடிகளாக தேர்ந்தெடுத்து, இந்த வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயிலில் வாழை மரங்கள் கட்டி, சீரியல் பல்புகள் அலங்கரிக்கப்பட்டு கல்யாண வீடுகளை போல் தேர்தல் நடைபெற்றது. கல்யாணத்தின் போது மணமக்களை வாழ்த்த வருபவர்களுக்கு பன்னீர், சந்தனம் தெளித்து வரவேற்பது போல் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கும் சந்தனம், பன்னீர் தெளித்து மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வாக்கு சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்து சென்றனர்.