விழுப்புரம், ஏப். 19: மக்களவை தேர்தலையொட்டி கடைகள், ஓட்டல்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. பேருந்துகளும் சரிவர இயக்கப்படாததால், விழுப்புரம் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 38 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடந்தது. இதையொட்டி அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனால் விழுப்புரம் நகரில் நேற்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி சாலை, பாகர்ஷா வீதி, எம்ஜிரோடு உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.அதே போல் கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் மதிய உணவு கிடைக்காமல் பலர் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும் 11 மணி முதல் விழுப்புரம் பஸ் நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது. மக்களவை தேர்தலையொட்டி நேற்று விழுப்புரம் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.