தஞ்சை, ஏப்.18: தஞ்சை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி எல்லையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்வதை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் நேற்று ஆய்வு செய்தார். தஞ்சை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 59 பள்ளிகளில் 198 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 17 அரசு பள்ளிகள், மீதமுள்ளவை அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகும். இந்த பள்ளிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் மைங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, மாற்றுதிறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக சாய்தளம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். இதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையர், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று தஞ்சை மாநகர எல்லையில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை ஆய்வு செய்தனர். இதில் குடிநீர் வசதி இல்லாத மையங்களில் உடனே குடிநீர் தொட்டி வைக்கவும், சாய்தளம் அமைக்காத வாக்குப்பதிவு மையங்களில் சாய்தளம் அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் தஞ்சை மாநகர எல்லையில் அமையவுள்ள மாதிரி வாக்குப்பதிவு மையத்தையும் பார்வையிட்டார்.