திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது

திருவையாறு, ஏப்.18: திருவையாறில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த 10ம் தேதி தொடங்கியது. வருகிற 22ம் தேதி வரை 13 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி கொடி ஏற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் கோயிலின் திருவோலக்க மண்டபத்தில்நடைபெற்றது.

அதில் மரகதலிங்கத்திற்கு பால், தேன், மஞ்சள், சந்தனம், பழம் போன்ற திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் மேளதாள, நாதஸ்வர இன்னிசை கச்சேரி, சிவாச்சாரியர்கள் வேத பாராயணம் முழங்க நடைபெற்றது. தொடர்ந்து 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. இன்று (18ம் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறுகிறது.

இதில் 1000 கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். வருகிற 21ம் தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது. மறுநாள் (22ம் தேதி) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோயிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: