மே மாதம் 2வது வாரத்தில் இருந்து தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்: தேர்தலுக்காக திறந்துவிட்டதால் விபரீதம்

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தலை மனதில் வைத்து 15 அணைகளில் இருந்து தண்ணீர் தாராளமாக குடிநீர் விநியோகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் மேட்டூர், வைகை, முல்லை பெரியாறு, பாபநாசம், பவானிசாகர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மணிமுத்தாறு, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு, பரம்பிகுளம், ஆழியாறு, திருமூர்த்தி உட்பட 15 முக்கிய அணைகள் அடங்கும். 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணைகள்தான் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாகவே பதிவானது. இதனால் அணைகள், ஏரிகளில் எதிர்பார்த்த அளவு நீர்வரத்து இல்லை. இதைதொடர்ந்து அணைகளில் உள்ள நீர் இருப்பை கவனத்தில் கொண்டு குடிநீருக்கு  விநியோகம் செய்ய வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதியது. மேலும் குடிநீருக்காக 2 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் திறந்து விடவும் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் வாரியத்துக்கு அறிவுரை வழங்கவும் அந்த கடிதத்தில் கூறியிருந்தது. இதற்கிடையே கடந்த மார்ச் 8ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அப்போது 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் 62 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. இந்த தண்ணீரை மத்திய நீர்வள ஆணைய அறிவுரையின் பேரில் குடிநீருக்காக சேமித்து வைத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மே மாதம் வரை ஓரளவு குடிநீர் பிரச்னையை சமாளித்து இருக்க முடியும். ஆனால், நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி அணைகளில் இருந்து தண்ணீரை தாராளமாக குடிநீருக்கு விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக  ஒரே மாதத்தில் அணைகளில் இருந்து 21 டிஎம்சி வரை தண்ணீர் குறைந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 2வது வாரம் தான் தொடங்குகிறது. அப்படி இருக்கும்போது, அதுவரை தண்ணீர் பிரச்னையை எப்படி சமாளிப்பது? என்று  தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்த சூழ்நிலையில், ேகாடைகால மழை பெய்து தண்ணீர் பிரச்னையை சமாளிக்குமா? என்று அதிகாரிகள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

தற்போதைய நீர் இருப்பு

நேற்றைய நிலவரப்படி அணைகளில் மொத்தம் 39  டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது 15 அணைகளில் உள்ள 39  டிஎம்சியில் மேட்டூர் அணையில் மட்டுமே அதிகப்பட்சமாக 21 டிஎம்சி நீர்  இருப்பு உள்ளது. அதே நேரத்தில் ஆழியாறு, சோலையாறு, கிருஷ்ணகிரி,  பேச்சிபாறை, பெருஞ்சாணி, பாபநாசம், அமராவதி அணைகள் வறண்டு வருகிறது.

மேலும்  5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 2 டிஎம்சியும், 6 டிஎம்சி  கொள்ளளவு கொண்ட வைகையில் 1 டிஎம்சியும், 10 டிஎம்சி கொள்ளளவு கொண்ட முல்லை  பெரியாறில் 1.2 டிஎம்சியும், 1.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தியில்  1.2 டிஎம்சியும், 13 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 5.3  டிஎம்சியும், 32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 6 டிஎம்சி  மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை கொண்டு மே மாதம் இரண்டாவது வாரம்  வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியம்.

Related Stories: